
யாழ். மாவட்டத்திலுள்ள சகல அரசாங்க வைத்தியசாலைகளிலும் 35 வயதிற்கு மேற்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான விசேட இலவச மருத்துவ பரிசோதனைகள் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளன.
யாழ். மாநகரசபைப் பகுதியிலுள்ள அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை ஆஸ்பத்திரி வீதியிலமைந்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையிலும் ஏனைய பிரதேசங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் அந்தந்த பிரதேசங்களிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளிலும் இலவச மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் சிரேஷ்ட வைத்திய உத்தியோகத்தர்களால் உடற்திணிவுச் சுட்டி கணித்தல், உடற்பருமன் தொடர்பான ஆலோசனைகள், குருதி குளுக்கோஸ் அளவு கணித்தல், குருதியமுக்கம் பரிசோதித்தல், வாய்ச்சுகாதார மற்றும் பல்வியாதி தொடர்பான பரிசோதனைகள், கண் பரிசோதனை போன்ற மருத்துவ சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நடமாடும் மருத்துவ ஆய்வுகூடம், நடமாடும் பல்வைத்திய சேவை என்பன இதில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
எனவே அனைத்து மாநகரசபை பிரதேசத்தினுள் அமைந்துள்ள அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றும் 35 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களும் இவ் இலவச சேவையில் பங்குபற்றிப் பயனடையுமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment