Friday, July 15, 2011

இந்திய அணியில் யுவராஜ் சிங், ரெய்னா இடையே கடும் போட்டி: குழப்பத்தில் கப்டன் டோனி

 சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், மிடில் ஓர்டரில் காலியாக உள்ள ஒரு இடத்துக்கு சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில் யாரை தெரிவு செய்வது என்ற குழப்பத்தில் கப்டன் டோனி உள்ளார். சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில், நீண்ட இடைவெளிக்குப் பின் இடம் பெற்றார் யுவராஜ் சிங். இதனால் ரெய்னாவுக்கு விளையாடும் லெவன் அணியில் இடம் கிடைக்காது என்று பேசப்பட்டது. ஆனால், யூசுப் பதானை களத்துக்கு வெளியே உட்கார வைத்துவிட்டு, யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு தந்தார் டோனி. இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட யுவராஜ் சிங், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதனால், ஒருநாள் போட்டிக்கான அணியில் நிரந்தர இடத்தை தக்கவைத்துக் கொண்டார். தற்போது டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கவும், இவருக்கு சோதனை ஏற்பட்டுள்ளது.
துவக்கத்தில் காம்பீர், அபினவ் முகுந்த் இடம் உறுதியாகி விட்டது. அடுத்து மிடில் ஓர்டரில் மூத்த வீரர்கள் சச்சின், டிராவிட், லட்சுமண் இருப்பதால், ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது. பின் வரிசையில் கப்டன் டோனி இடம் பெறுவர். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வாய்ப்பு யாருக்கு செல்லும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஏனெனில், இடது கை துடுப்பாட்ட வீரர்களான இருவரும், சிறந்த போராட்ட குணம் உடையவர்கள். களத்தில் துடிப்பாக களத்தடுப்பு செய்வர். தேவையான நேரங்களில் பந்துவீச்சு செய்து, விக்கெட் வீழ்த்தும் திறமை பெற்றவர்கள்.
ரெய்னாவைப் பொறுத்தவரையில், கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் 3 அரைசதம் உட்பட 232 ரன்கள் (சராசரி 46.40) எடுத்துள்ளார். இவரது பலவீனம் என்று கருதப்பட்ட "ஷோர்ட் பிட்ச்” பந்துகளை, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நன்கு சமாளித்தது, இவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. இவரது சுழற்பந்து வீச்சு இங்கிலாந்து வீரர் சுவானுக்கு பதிலடியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அதேநேரம், உலகக் கோப்பை தொடர் நாயகன் யுவராஜ் சிங், கடைசியாக பங்கேற்ற 11 டெஸ்ட் போட்டியில் 7 அரைசதங்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக இவரது சராசரி 40 க்கும் மேலாக உள்ளது. இவருக்கு ஏற்கனவே அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன என்று கூறுவது அழகல்ல. ஏனெனில் ரெய்னாவுக்கு 22 வயது தான் ஆகிறது. இதனால் ரெய்னா இன்னும் காத்திருக்கலாம். தவிர, இங்கிலாந்தின் பீட்டர்சனுக்கு இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் என்றால் அவ்வளவு தான். விரைவில் அவுட்டாகி விடுவார்.
2008 ல் இந்தியா வந்த போது, இவரை பெரும்பாலும் அவுட்டாக்கியது யுவராஜ் சிங் தான். இது யுவராஜ் சிங்கிற்கு சாதகமாக உள்ளது. மற்றபடி, துடுப்பாட்ட திறமையை பொறுத்தவரையில் ரெய்னாவை விட, யுவராஜ் சிங் முன்னிலையில் உள்ளார்.
ஒருவேளை ரெய்னாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, யுவராஜ் சிங் ஒதுக்கப்பட்டால் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்புவது என்பது, எப்போதும் இயலாத காரியம் தான். காயத்தால் அவ்வப்போது அவதிப்பட்ட இவரது 12 ஆண்டுகால கிரிக்கட்டில், 34 டெஸ்டில் (1639) பங்கேற்ற திருப்தி மட்டுமே கிடைக்கும்.
இவர்களில் யாரை தெரிவு செய்வது என்பது டோனியின் கையில் தான் உள்ளது. யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்கலாம் என டோனி நினைத்தால், பின் தொடர் முழுவதும் ரெய்னா, வெளியில் தான் இருக்க வேண்டும்

No comments:

Post a Comment